ஜெ. கேள்விகள் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று உரையாற்றிய அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, ஏழை-எளிய மக்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற தி.மு.க. அரசின் வாக்குறுதி, நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியம் இல்லாதது என்பதை புள்ளி விவர ஆதாரங்களுடன் விளக்கமாக எடுத்துக் கூறினார். அரசியலில் தம்மை ஆளாக்கிய அமரர் எம்.ஜி.ஆரை வணங்கி, பேரவைக்கு தம்மை மீண்டும் தேர்ந்தெடுத்த ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து, தமது உரையை செல்வி ஜெயலலிதா தொடங்கினார். இதனைத்தொடர்ந்து, தி.மு.க அரசின் பல்வேறு உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகள் பற்றி அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையிலும், ஆளுநர் உரையிலும் குறிப்பிடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய செல்வி ஜெயலலிதா, 86 லட்சம் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க, 1 கோடியே 72 லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும், இந்நிலையில், வெறும் மூன்றரை லட்சம் ஏக்கர் தரிசு நிலம் மட்டுமே அரசுப் பொறுப்பில் இரு-ப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், எப்படி அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் வழங்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திரு.கருணாநிதி, சிறு குறு விவசாயிகளிடம் இருந்து - தரிசு நிலங்களைப் பெற்று, அதனை மேம்படுத்தி, அவர்களிடமே திருப்பித் தரப்போவதாக தெரிவித்தார். இது சரியான பதில் அல்ல என்பதை செல்வி ஜெயலலிதா சுட்டிக்காட்டியதோடு, 86 லட்சம் பேருக்கு எப்படி நிலம் வழங்க முடியும்? என்பதற்கு உரிய விளக்கத்தை திரு.கருணாநிதி அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில், நிதியமைச்சர் திரு.அன்பழகன் குறுக்கிட்டு, ஏழைகள் அத்தனை பேரு- க்கும் நிலம் கொடுக்கப்படும் என தாங்கள் சொல்லவில்லை என்று கூறினார். தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது நிலம் தர முடியாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என செல்வி ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள் - ஜெ.
தமிழகத்தில், அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, சட்டப்பேரவையில் இன்று வலியுறுத்தினார். ஆனால், அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய முடியாது என நிதியமைச்சர் திரு.அன்பழகன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று உரையாற்றிய செல்வி ஜெயலலிதா, விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் சுமார் 7 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்போவதாக தி.மு.க அரசு அறிவித்திருப்பது பற்றி சுட்டிக்காட்டினார். இந்நிலையில், ஏற்கனவே தங்கள் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என கேள்வி எழுப்பினார். அவர்கள் திருப்பிச் செலுத்திய தொகையை, அவர்களிடமே அளிக்க வேண்டும் என்றும், இதற்கு மேலும் 500 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால், உரிய நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகள் பற்றி, தி.மு.க அமைச்சர்கள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. விவசாயிகளின் கூட்டுறவுக் கடனை மட்டுமே தள்ளுபடி செய்தால் போதாது என்றும், ஏழை-எளிய விவசாயிகள் பலர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இதர வர்த்தக வங்கிகளில் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தினார். இதற்கு மேலும் 7 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், அவர் தெரிவித்தார். இந்நிலையில், நிதியமைச்சர் திரு.அன்பழகன் குறுக்கிட்டு, விவசாயிகளின் கூட்டுறவுக் கடனை மட்டும்தான் தங்களால் தள்ளுபடி செய்ய முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். விவசாயிகள், தங்கள் மாமன், மைத்துனர் ஆகியோரிடம் எல்லாம் வாங்கிய கடனை, தங்களால் தள்ளுபடி செய்ய முடியாது என்று ஏளனம்தொனிக்க திரு.அன்பழகன் தெரிவித்தார். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் புதிய கடன் வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்திருப்பதை பேரவையில் சுட்டிக்காட்டிய செல்வி ஜெயலலிதா, டெல்டா விவசாயிகளின் சாகுபடி பணிக்காக, அடுத்த மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தக் கடன் தொகையை தற்போதே விவசாயிகளுக்கு அளித்தால்தான், விவசாயப் பணிகளை உரிய நேரத்தில் அவர்கள் தொடங்க முடியும் என்று தெரிவித்தார். இந்தப் பணத்தை கூட்டுறவு வங்கிகள் எப்படி அளிக்கப்போகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கும் தி.மு.க அமைச்சர்கள் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை.
சட்டம் - ஜெ.
கட்டாய மதமாற்றத் தடை சட்டம், அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்தச் சட்டம் அமலில் இருப்பதைப் போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, அதனை தற்போது வாபஸ் பெறப்போவதாக தி.மு.க அரசு அறிவித்திருப்பது, சிறுபான்மை மக்களை ஏமாற்றும் முயற்சி என செல்வி ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று உரையாற்றிய செல்வி ஜெயலலிதா, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே அவசர சட்டம் மூலம் அறவே நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்நிலையில், இந்தச் சட்டம் தற்போது வாபஸ் பெறப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தார். இதன்மூலம், சிறுபான்மை மக்களை திசைதிருப்பவும், ஏமாற்றவும் தி.மு.க அரசு முயற்சிப்பதாக அவர் புகார் கூறினார். அவசரச் சட்டம் மூலம், ஒரு சட்டம் வாபஸ் பெறப்படுவது குறித்து, கடந்த 1985-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு குறித்தும், செல்வி ஜெயலலிதா எடுத்துக்கூறினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் திரு.கருணாநிதி, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் தற்போது வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து சில விளக்கங்களை அளித்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த செல்வி ஜெயலலிதா, இத்தகைய விளக்கம் உச்சநீதிமன்றத்தையே அவமதிக்கும் செயல் எனக்குறிப்பிட்டார். தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் அனைத்து மாணவ-மாணவியருக்கும், அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது பற்றி குறிப்பிட்ட செல்வி ஜெயலலிதா, இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி அளித்ததைப் போன்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க தி.மு.க முயற்சிப்பதாகத் தெரிவித்தார். தமிழக அரசு, நிதி நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, மத்திய திட்டக்குழு அளித்த நிதியை, இலவச சைக்கிள் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்த நிதி என தெரிவிப்பது சரியானதல்ல என்றும், செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டார். முந்தைய அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் தேசிய விகிதத்தைவிட, தமிழக வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்ததை புள்ளி விவர ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிய செல்வி ஜெயலலிதா, இந்த உண்மைகள், ஆளுநர் உரையில் மறைக்கப்பட்டு, தவறான தகவல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.